I have an idea to create the world the way you want, so be part of this forum...

Sunday 3 April 2016

விடுதி நினைவுகள்

அரசு விடுதி;  நண்பர் ஒருவருடன் காலையில் தொலைப்பேசியில் பேசி கொண்டிருந்த போது கடந்து போன நினைவுகளை , ஒட்டு மொத்தமாக அசை போட வைத்துவிட்டார்.




எங்கள் சிறிய அறையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை இரண்டுதான், ஆனால் மீதமுள்ள சிறிய இடத்தை நிரப்புவதற்கு எப்போதும் நண்பர்கள் கூட்டம் குறைந்ததில்லை. அறை எண் 505 இதழியல் படிக்கும் மாணவர்கள், அவர்களின் நண்பர்கள் என பலரின் சப்தங்களோடு பகலிலும், இரவிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். பல்கலைக்கழக விடுதியில் இடம் கிடைத்த போது அறை எண் 505 இல்,  நானும் மற்றொரு நண்பர் என இரண்டு பேர் மட்டுமே  இதழியல் துறையை சார்ந்தவர்கள், மீதமுள்ள நண்பர்கள் வரலாறு, எம்.காம் போன்ற முதுகலை பட்ட படிப்புகளை படிப்பவர்களாக இருந்தார்கள்.

நினைத்தே பார்க்க முடியாத இரவாக பல இரவுகள் இருந்திருக்கும், காரணம் தூக்கம் யாருக்கும் அவ்வளவு எளிதாக வராது. சீட் விளையாடுவதில் தொடங்கி, அரசியலை பற்றி பேசி மொத்த உலக நிகழ்வுகளையும் நேரடியாக சென்று பார்த்தது போலான சொல்லாடல்களுடன் லைட்டை ஆஃப் செய்யாமலேயே தூங்கிவிடுவார்கள்.

(இதிலிருந்து தப்பித்து கொள்வதற்காகவும், தேவைக்கான பணத்தை நாமே சம்பாதித்து கொள்வதற்காக பகுதி நேர வேலைக்கு சென்று கொண்டிருந்த காலம். அப்போது இருந்து எனக்கான வேகத்தில் 10 % கூட இப்போது இல்லை என்பது தான் உண்மை)

கதைக்கு வருவோம் !!!

பகுதி நேர வேலையை முடித்துவிட்டு இரவு 12 அல்லது 1 மணிக்கு அறைக்கு வருவது வழக்கம். எஞ்சியிருக்கும் 5 மணி நேரத்தை சரியாக பயன்படுத்தி தூங்கினால் தான் மறுநாள் வகுப்புக்கு சரியான நேரத்திற்கு தெளிவாக செல்ல முடியும்.

 வகுப்புக்கு 9.30மணிக்கெல்லாம் செல்லவில்லை என்றால் ஆய்வு மாணவர் ஆரோக்கியசாமி தாமதமாக வருபவர்களின் பெயரை பேராசிரியரிடம் தெரிவித்துவிடுவார்.

( எத்தனையோ திறமையான ஊடகவியலாளர்களை பார்த்திருப்பினும் எனது பேராசிரியர் ரவீந்திரன் எனக்கு இப்போதும்  வியக்கதக்கராகவே தெரிகிறார். எந்த அளவிற்கு தமிழில் ஆளுமையோ அதே ஆளுமை ஆங்கிலத்திலும் சிறிய ஒரு நிகழ்வை கூட ஆய்வு சார்ந்து அதற்கான ஆயிர விளக்கங்களை புரிகிற மொழியில் எளிமையாக பேசும் திறன் கொண்டவர்.

பேராசிரியரிடம் தாமதமாக வந்து கெட்ட பேர் வாங்கிவிட கூடாது என்பதற்காக ஒயிட் போடு, கீரின் போடு, ரெட் போடு எல்லாம் எப்போதும் பார்ப்பதில்லை. நடந்தே வந்துவிடுவோம் ( நண்பர்கள் ஒரு சிலர்).)

அறை எண் 505 க்கு வருவோம். எங்கள் அறையில் எப்போதும் கூட்ட நெருக்கடி தான், முன்பே சொன்னது போல ஒரு சில நாட்களில் 5 பேர் , பல நாட்களில் 10 நண்பர்கள் வரை தூங்குவது வழக்கம். காமராஜர் சாலையில் வைக்கப்படும் பதாகைகள் தான் எங்களது மெத்தைகளாக பல நாட்களில் இருந்திருக்கும்.

நான் அறைக்கு 12 அல்லது 1 மணிக்கு வரும் போது ஒருவன் உலரி கொண்டிருப்பான், மற்றொருவன் அறை அலரும் அளவிற்கு கொரட்டை விட்டு தூங்கி கொண்டிருப்பான், இப்படியாக மீதமுள்ள அனைவரும் இவை இரண்டில் ஒன்றை செய்து கொண்டிருப்பார்கள். விடுதியில் எனக்கும் வழங்கும் உணவை எனது  தட்டில் அறை நண்பர்கள் யாராவது எடுத்து வைத்திருப்பார்கள்.


(((எனக்காக இந்த சேவையை செய்ய அவர்கள் ஒருநாள் கூட வருந்தியதில்லை ..)))

(((எப்போதும் பெரிதாக நண்பர்கள் என்று சொல்ல கூடிய வகையில் ஒரு சிலரை தவிர பெரிய அளவிலான கூட்டம் இருந்ததில்லை, அப்படி இருக்க, ஒரு போதும் நான் விரும்பியதும் இல்லை. ஆனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் என்னை பெரிதாக மதிக்க கூடிய நண்பர்கள் இருப்பதுண்டு.)))

தனியார் விடுதிகளில் தங்கி படித்தவர்களின் அனுபவங்களை கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் அரசு விடுதிகளிலும், அரசு சார்ந்து இயங்கும் கல்வி நிலையங்களிலும்  சுவைக்கப்படும் அனுபவங்கள் காலத்திற்கும் பல தனியார் கல்வி குழுமங்களில் கிடைப்பதில்லை.

பல துறைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சம்பந்தமே இல்லாமல் கலந்து கொண்டு உணவு அருந்துவது, ரூ.9க்கு காலையில் பொங்கள், ரூ.14 க்கு மதியம் சாம்பர் ரைஸ், சின்ன சின்ன துறை சார்ந்த போராட்டங்களை வளாகத்தில் நடத்துவது என அத்தனை சிலிர்ப்பூட்டும் நினைவுகளை இன்றைக்கு அசை போட வைத்து விட்டது சென்னை பல்கலைக்கழக திருவள்ளுவர் ஆடவர் விடுதி.

அவசரமாக சைக்கிலில் பல்கலைக்கழக சென்று பின் பகுதி நேர வேலைக்கு செல்வதும், வேலை செய்ய கூடிய இடத்திற்கு பல்கலைக்கழக பெண்கள் வந்தால் ஒடி ஒழிவதுமான அந்த வாழ்க்கையை நினைத்து பார்க்கும் போது இன்றும் அவ்வளவு மகிழ்ச்சி...







1 comment:

  1. Fantastic blog you have here. You’ll discover me looking at your stuff often. Saved!
    dewapoker
    poker88
    dewapoker88

    ReplyDelete